“மகளிர் மட்டுமல்ல... ஆண்களும் சேர்ந்து மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும்”- முதல்வர் ஸ்டாலின்

“மகளிர் மட்டுமல்ல... ஆண்களும் சேர்ந்து மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும்”- முதல்வர் ஸ்டாலின்
“மகளிர் மட்டுமல்ல... ஆண்களும் சேர்ந்து மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும்”- முதல்வர் ஸ்டாலின்

“மகளிர் தினம் என்பது பெண்கள் மட்டும் கொண்டாடுவதாக இல்லாமல் ஆண்களும் சேர்ந்து கொண்டாடக்கூடிய காலமாக மாறவேண்டும்” என மகளிர் தின விழாவில் முதலமைச்சர் பேசியுள்ளார்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இன்று சர்வதேச மகளிர் தினவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

“காலையில் இந்த நிகழ்ச்சிக்காக நான் எனது இல்லத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு இன்று மகளிர் தினத்தையொட்டி நம்முடைய பெண் காவலர்களுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்ற நிலையில், குறிப்பிட்ட பெண் காவலர்கள் சிலரை எனது இல்லத்திற்கு அழைத்து அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை சொல்லிய பின்னரே இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

இன்றைக்கு காவலர்களாக மட்டுமல்ல, இந்த அரங்கத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் காண முடிகிறது. இன்றைக்கு மகளிர் எந்த அளவிற்கு இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது, நான் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இப்போது எனக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம் இதைப் பார்த்து ரசிப்பதற்கு தந்தை பெரியார் இல்லையே, என்ற அந்தக் கவலைதான்.

இன்றைக்கு பெண்கள், சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மேயர்களாக, அமைச்சர்களாக, அதிகாரிகளாக எந்த அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.

பெண்ணாக பிறப்பது மட்டுமே பெருமைக்குரியது அல்ல. அத்தகைய பெண் ஒரு சமூகத்தை வழிநடத்துபவராக உயர்ந்து நிற்பதையே நாமும் இந்த நாடும் விரும்புகிறோம். அத்தகைய பெண்களை தான் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்லியிருக்கிறார். அத்தகைய பெண்களை உருவாக்க ஊக்கம் தரும் நாள்தான் இந்த மகளிர் நாள். இந்த மார்ச்-8 என்பது மகளிருக்கு மட்டுமல்ல... மனிதகுலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது.

இந்த உலகில் எந்நாளும் போற்றப்பட வேண்டியவர்கள் பெண்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சங்ககாலம் முதலே, பெண்கள் உயர்வாகவும், மதிக்கத்தக்கவர்களாகவும் போற்றப்பட்டு வருகின்றனர். அந்தக் காலத்திலேயே பெண்பால் புலவர்கள் மிகுதியாக செய்யுள் இயற்றியிருக்கிறார்கள். மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது.

இரண்டு மன்னர்களுக்கு இடையில் ஏற்பட்ட போர், அதற்காக தூது போய் அந்தப் போரை நிறுத்தக்கூடிய துணிச்சல் அவ்வைக்கு இருந்தது. இடையில் ஏற்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளால் பெண்கள் முடக்கப்பட்டார்கள், அடக்கப்பட்டார்கள். இதில் இருந்து பெண்ணை விடுவிக்க ஒரு இயக்கம் தேவைப்பட்டது, அதுதான் திராவிட இயக்கம். பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது. ’சிறுத்தையே வெளியில் வா’ என்றுகூறி, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெண்ணினத்திற்கும் அறைகூவல் விடுத்தது திராவிட இயக்கம்.

மாநாடு நடத்தினால் பெண்கள் அதிகமாக பங்கெடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் அழைத்தார்கள். போராட்டம் நடந்தால் தனது மனைவி நாகம்மையாரையும் - தங்கை கண்ணம்மாவையும் அழைத்துச் சென்றார் பெரியார் அவர்கள். 'நாட்டில் நடக்கும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை, தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெண்களின் கையில் தான் இருக்கிறது' என்று 1922-ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் சொல்லக் காரணமானவர்கள் நாகம்மையாரும், கண்ணம்மாளும். இத்தகைய வீறுகொண்ட பெண்களைப் பார்த்து தான் ஏராளமான பெண்கள் அரசியலுக்குள் நுழைந்தார்கள். இன்னும் சொன்னால், தந்தை பெரியார் அவர்களுக்கு 'பெரியார்' என்ற பட்டத்தைத் தந்ததும் பெண்கள்தான்.

வடசென்னை பகுதியில் இருக்கின்ற ஒற்றைவாடி கலையரங்கத்தில் தான் அந்த விழாவை நடத்தி பெண்கள் தான் தந்தை பெரியாருக்கு 'பெரியார்' என்ற அந்தப் பட்டத்தை கொடுத்தார்கள். அது வரையில் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்று சொன்னார்கள். 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அது வழங்கப்பட்டது. அதனுடைய 50-ஆம் ஆண்டில்தான், பெரியாருடைய கனவை நனவாக்கக்கூடிய வகையிலே பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்கிய தலைவர்தான் 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நான் இங்கே நினைவுபடுத்துகிறேன். இப்படி பல போராட்டங்கள் உள்ளன.

நிமிர்ந்த நன்னடை - நேர்கொண்ட பார்வை - திமிர்ந்த ஞானச் செறுக்குக்குப் பெயர் பெற்றிருக்கக்கூடிய சிங்கப் பெண்களாக, இந்த இனிய விழாவில் கலந்து கொண்டிருக்கக்கூடிய உங்களையெல்லாம் பார்க்கும்போது, திராவிட இயக்கத்தினுடைய பெண்ணுரிமைப் போராட்டங்களால் விளைந்த பயனை எங்களால் கண்கூடாக இங்கே காண முடிகிறது.

இதற்கு வித்திட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் போன்றவர்கள், அதேபோல திராவிட இயக்கத்தினுடைய தலைவர்களையும், சாவித்ரி பாய் பூலே, அண்ணல் அம்பேத்கர் போன்ற போராளிகளையும் நன்றியோடு பெண்ணினம் நினைத்துப் பார்க்க வேண்டும். இவர்களது வழித்தடத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு இன்றைக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

ஆட்சிக்கு வந்ததும் நான் கையெழுத்திட்ட ஐந்து கோப்புகளில், மகளிருக்கு நகர பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பதும் ஒரு கையெழுத்து என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இதை சலுகையாக நான் சொல்லவில்லை - மகளிர் உரிமை என்று நான் சொல்வேன். இது பெண்களுடைய சமூகப் பொருளாதார விடுதலையை வழங்கி இருக்கிறது. இதனால், மாதந்தோறும் 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை செலவு மீதம் ஆகிறது என்று பெண்களே சொல்கிறார்கள். இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதைவிட, எத்தனை லட்சம் பெண்கள் பயனடைகிறார்கள் என்பதுதான் நம்முடைய இலட்சியம். இப்படி பல திட்டங்களால் பெண்கள் பலனடைந்துள்ளனர்.

இன்னும்கூட அதிகாரம் பொருந்தியவர்களாக பெண்களை உயர்த்துவதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறோம். பெண்களை உயர்கல்வி படிக்க வைத்தல் - அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை உருவாக்கித் தருதல் - மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல் - கடன்கள் கொடுத்தல் -புதிய தொழில்களைச் செய்ய வைத்தல் - உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளைப் பெறுதல் - என பெண்களை அனைத்து வகையிலும் முன்னேற்றி வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.

கடந்த 6-ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு நிறைவு விழாவிலே நான் பங்கெடுத்தேன். பலநூறு ஆண்டுகளாக இருந்த அது போன்ற அடிமைத்தனத்தை, கொடூரத்தை துடைத் தெறியக்கூடிய சீர்திருத்தவாதிகளும், பெண்களும் கூட்டாகச் சேர்ந்து போராடியதன் விளைவுதான் இன்றைக்கு அனைத்து இடங்களிலும் பெண்கள் தலைநிமிர்ந்து நின்று கொண்டு இருக்கிறார்கள். பெண்கள் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். பல பொறுப்புகளுக்கு அவர்கள் வந்திருக்கலாம். பலரும் பொருளாதாரச் சுதந்திரத்தை அடைந்திருக்கலாம். ஆனால், மனரீதியாக பெண் என்றால் ஆணுக்கு அடிமைத்தனம் என்பது ஆண்கள் மனதில் இன்னும் இருக்கிறது. இதை நாம் எப்படியாவது மாற்றியாக வேண்டும்.

பெண்ணுரிமை சிந்தனையில் ஒவ்வொரு ஆணும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் மிக விளக்கமாக சொல்லியிருக்கிறார். உங்கள் மகளை மனதில் வைத்து - உங்கள் சகோதரியை மனதில் வைத்து - பெண் விடுதலை குறித்து ஒவ்வொரு ஆணும் சிந்திக்க வேண்டுமென்று சொல்லி இருக்கிறார் தந்தை பெரியார். அப்படி ஆண்கள் அனைவரும் சிந்திக்கக் கூடிய காலம் உருவாக வேண்டும்.

மகளிர் நாள் என்பது பெண்கள் மட்டும் கொண்டாடுவதாக இல்லாமல் - ஆண்களும் சேர்ந்து கொண்டாடக்கூடிய காலமாக அது மாறவேண்டும். கல்வியில் - வேலைவாய்ப்பில் - தொழிலில் - சமூகத்தில் - சிந்தனையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அத்தகைய சிந்தனை மாற்றத்தை சமூகத்தில் விதைக்க இது போன்ற மகளிர் தின விழாக்கள் பயன்பட வேண்டும்” என்று முதலமைச்சர் பேசினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com