சேகர் பாபு அல்ல; செயல்பாபு - அமைச்சரை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரை சேகர்பாபு என்ற அழைப்பதைவிட, செயல்பாபு என்று தான் அழைக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகள் என 12,959 பேருக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ''அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரை சேகர்பாபு என்ற அழைப்பதைவிட, செயல்பாபு என்று தான் அழைக்க வேண்டும். அதற்கு இந்த நிகழ்ச்சியே சான்று. சட்டமன்றத்தில் ஒரு திட்டத்தை அறிவித்து ஒரு வாரம் தான் ஆகிறது. சட்டமன்றம் கூட இன்னும் நிறைவடையவில்லை. ஆனால், அதற்குள் அந்த திட்டத்தை நிறைவேற்ற காரணமாக இருப்பவர் சேகர் பாபுதான். 'எள் என்று சொன்னால் எண்ணெயாக இருப்பார்கள்' என்று சொல்ல கேள்வி பட்டிருக்கிறோம்.
சேகர்பாபுவை பொறுத்தவரை, 'எள்' என்று கூட சொல்ல தேவையில்லை. அதற்கு முன்பே எண்ணெயாக மாறக்கூடியவர். 12,959 கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். அர்ச்சகர்களுக்கு ரூ4,000 நிதி, 15 வகையான பொருட்களை வழங்கியிருக்கிறோம்
'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. கோயில் நிலங்கள், சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு வருகிறது; தமிழில் வழிபாடும் தொடங்கியுள்ளது. அர்ச்சகர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 120 அறிவிப்புகளை யாருமே செய்யாத வகையில் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார் சேகர்பாபு. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இப்படியாக அறநிலையத்துறையில் அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக பணியாற்றி வருகிறார்'' என்றார்.