உடல் அடக்கத்தை எதிர்த்தால் கடும் நடவடிக்கை - முதல்வர் எச்சரிக்கை
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தை எதிர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி “கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் பிற களப்பணியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. தன்னலம் கருதாமல் மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிரை துறப்போருக்கு பொதுமக்கள் தகுந்த மரியாதை தர வேண்டும். கொரோனாவால் இறந்தோரின் இறுதிசடங்கின்போது நடந்த சம்பவங்கள் வருத்தமும் வேதனையையும் அளிக்கிறது
.
ஏற்கெனவே நடந்தது போல் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தகுந்த மரியாதை அளிக்கும் விதத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோரின் பக்கம் அரசு முழுமையாக நிற்கும். கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் அடக்கம் செய்ய ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தை எதிர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.