பொங்கல் பண்டிகையை மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை தேவை எனவும், விருப்ப விடுமுறை பட்டியலில் திருவள்ளுவர் திருநாளையும் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக மத்திய அரசு தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட விளக்கத்தில் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி பிறந்த நாள் உள்ளிட்ட 14 நாட்கள் மத்திய அரசின் கட்டாய தேசிய விடுமுறை பட்டியலில் உள்ளன. இந்த 14 நாட்களில் ஏதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பட்சத்தில், விருப்ப விடுமுறையில் இருந்து அவற்றை நிரப்புவதும் வழக்கமாக உள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டில் காந்தி ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை வந்ததால், பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இடம் பெற்றது. இந்த ஆண்டில் அது வழக்கம்போல விருப்ப விடுமுறைப் பட்டியலில் நீடிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.