யாருடைய நிலத்தையும் பறித்து, 8 வழிச்சாலை திட்டத்தை அரசு செயல்படுத்தாது - முதலமைச்சர்
மக்களிடமிருந்து நிலத்தை பறித்து, சேலம் - சென்னை 8 வழிசாலை திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் மாநில அரசுக்கு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு பாலத்திற்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதில், ஏவிஆர் ரவுண்டானாவிலிருந்து ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை பணிகள் முடிந்த இரண்டரை கிலோ மீட்டர் பாலப்பகுதியை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர், உலகத்தரத்தில் சாலைகளை உருவாக்கவே மத்திய அரசு எட்டுவழிச்சாலை திட்டத்தை அறிவித்ததாக கூறினார். மேலும், யாருடைய நிலத்தையும் பறித்து திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சமாதானப்படுத்தி திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் வளர்ச்சி, மேம்பாடு, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவே 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது எனவும் விளக்கமளித்தார்.
சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் மாநில அரசுடையது அல்ல, மத்திய அரசுடையது எனவும் மக்களின் வசதிக்காகவே 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படுகிறது. தனிநபரின் வசதிக்காக அல்ல எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.