மாஸ்க் கட்டாயம், 144 தடை உத்தரவு தொடரும்: என்னென்ன கட்டுப்பாடுகள்?
தமிழகத்தில் 144 தடை உத்தரவு தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செப்டம்பர் ஒன்றால் தேதி முதல் 30 வரையிலான புதிய தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்க அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஈ-பாஸ் நடைமுறை ரத்து, மாவட்டத்திற்குள் பேருந்து சேவைக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், தமிழகத்தில் 144 தடை உத்தரவு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில் “மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைப்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும் பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம். பொதுமக்கள் வீடுகளிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும் வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் அவசியத்தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.