நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு - தமிழக முதல்வர் ஆலோசனை
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உள்ள நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். முன்னதாக, தமிழகத்தில் நேற்று மாலை 6 மணிமுதல் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் நேற்று இரவு பேசிய பிரதமர் மோடி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் தலைமைச் செயலாளர், டிஜிபி, அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பிரதமரின் உத்தரவை முழுமையாக தமிழக அரசு பின்பற்றும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களை தனிமையாக வைத்து கண்காணிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனி மருத்துவமனைகள் நான்கு இடங்களில் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. தாம்பரம் சானிட்டோரியம், மதுரை தோப்பூர் உட்பட நான்கு இடங்களில் மருத்துவமனைகள் அமைய உள்ளதாக தெரிகிறது.