காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை

காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை
காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மனமுடைந்த பெண் தற்கொலை

உடலுறவு மேற்கொண்டுவிட்டு காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரத்தில் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஜெயதேவி, கருணாநிதி இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால், படிக்கும் போதே இருவரும் அடிக்கடி ஒருவரையொருவர் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. நாளடைவில் இது அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு சென்ற போதிலும் போன் மூலம் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில், கருணாநிதி, ஜெயதேவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உடலுறவு மேற்கொண்டிருக்கிறார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கருணாநிதியிடம் ஜெயதேவி கேட்டார். ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதனால் தனது வாழ்க்கை பாழாகிவிட்டதே என்கிற சோகத்தில் ஜெயதேவி இருந்தார். இதுபற்றி, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ஜெயதேவி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் தனது வாழ்க்கையை எண்ணி ஜெயதேவி மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. நேற்று காலை வீட்டில் குளியலறைக்கு சென்ற ஜெயதேவி, அங்கு விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை, சகோதரிகள் இருவரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ஜெயதேவி உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த ஜெயதேவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தற்கொலை செய்வதற்கு முன், ஜெயதேவி எழுதிய 3 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் தனது முடிவுக்கான காரணத்தை உருக்கமாக எழுதியுள்ளார். இதனிடையே இச்சம்பவம் பற்றி அறிந்த ஜெயதேவியின் உறவினர்கள், அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அப்போது ஜெயதேவியை காதலித்து ஏமாற்றிய கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாக கைது செய்ய வேண்டும், மேலும் நேற்று முன்தினம் ஜெயதேவி அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் ஜெயதேவியின் உடலை பெற்று செல்வோம் என்று தெரிவித்தனர். இதனால், அவரது உடல் பிரேதப் பரிசோதனை கூடத்திலேயே வைக்கப்பட்டது. இதனிடையே, ஜெயதேவி அளித்த புகாரின் பேரில் கருணாநிதியை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com