இன்னும் எத்தனை உயிர்கள்! மதுபோதையில் பைக்கை அதிவேகமாக ஓட்டிய இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்!
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை பள்ளிகரணை, ஆதிபுரிஸ்வரர் கோயில் எதிரே இன்று அதிகாலை மதுபோதையில் இருந்த இருவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இருவரும் பெருங்குடியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு (24), பம்மலை சேர்ந்த கோகுல் (24) என்பதும் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.