காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு..? 18 சிறுமிகள் மீட்பு - தொடரும் விசாரணை!
சென்னை வியாசர்பாடியில் உள்ள காப்பகத்தில் இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 26-வது பிளாக்கில் தனியார் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் சிறுமிகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குநராக கல்யாணசுந்தரம் என்பவர் இருந்து வருகிறார். இந்த காப்பகத்தில் சுமார் 18-க்கும் மேற்பட்ட சிறுமிகள் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி இரவு சிறார்களுக்கான ஹெல்ப்லைன் 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு சிறுமி ஒருவர் போன் செய்து காப்பகத்தில் பாலியல் தொல்லை தரப்படுவதாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகளை மீட்டனர்.
இதையடுத்து அவர்களை சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சிறுமிகள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டார்களா சிறுமிகளுக்கு அந்த இடத்தில் எந்த மாதிரியான துன்புறுத்தல்கள் நடந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.