“முகம் சுளிக்கும் வகையில் பதில்” - சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், கண்ணியக்குறைவான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், சென்னை பத்திரிகையாளர் மன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
பொது இடங்களிலும் ஊடகச் சந்திப்புகளிலும் சீமான், தொடர்ந்து ஆபாச மற்றும் இழிசொற்களை பயன்படுத்தி வருவதாக செய்திக்குறிப்பு ஒன்றில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் விமர்சித்துள்ளது. கோவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், ’புதிய தலைமுறை’ பெண் செய்தியாளரிடம் முகம்சுளிக்கும் வகையில் சீமான் பதிலளித்திருப்பதாக, அதில் சுட்டிக் காட்டியுள்ளது.
பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்பும் இல்லாமல், அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளை சீமான் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பொது இடங்களிலும் ஊடகச் சந்திப்புகளிலும் கண்ணியம் அறிந்து நடந்துகொள்ள வேண்டுமென சீமானை, சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.