தொழிலதிபரை கத்தியைக் காட்டி கடத்திய ரவுடிகளுக்கு வலைவீச்சு
சென்னையில் கத்தியைக் காட்டி மிரட்டி தொழிலதிபரை கடத்திய, பிரபல ரவுடியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை அருகேயுள்ள அயப்பாக்கத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவர், அம்பத்தூரில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்றிரவு 11.30 மணியளவில் வில்லிவாக்கம் ஐசிஎஃப் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ஓய்வு எடுத்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி தில் பாண்டியும், அவரது கூட்டாளிகளும், காரில் ஏறியுள்ளனர். காரை கோயம்பேடு ஓட்டிச் சென்ற அவர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு முகேஷை மிரட்டியுள்ளனர்.
தன்னிடம் பணம் இல்லை என முகேஷ் கூறியதை அடுத்து, கண்ணாடி பாட்டிலால் அவரைத் தாக்கியுள்ளனர். மதுரவாயல் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர்களிடமிருந்து தப்பிய முகேஷ், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், மதுரவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ரவுடி தில் பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.