கருணாஸை போலீஸ் காவலில் விசாரிக்க கோரும் மனு தள்ளுபடி
எம்.எல்.ஏ கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 16-ஆம் தேதி சென்னையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாஸ், காவல்துறையினரையும் முதலமைச்சரையும் விமர்சித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து கருணாஸை செப்டம்பர் 23ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கருணாஸ், புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர், ஜாமின் கோரி கருணாஸ் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், கருணாஸை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.
இந்நிலையில், போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது போலீசாரின் மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கருணாஸ் மீதான வழக்கில் போலீஸ் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருணாஸை விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.