காவல்துறையினர் மிரட்டினார்களா?... திருமலா நவீன் மரண வழக்கில் காவல் ஆணையர் அருண் விளக்கம்!
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
அதில், ” திருமலா நிறுவன மேலாளர் நவீன் மரணம் தற்கொலை போன்றுதான் உள்ளது. அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் தற்கொலை என்றே தெரிகிறது. மேலாளர் நவீனை காவல் துணை ஆணையர் அலுவலகம் அழைத்து விசாரிக்கவில்லை.
நவீன் அனுப்பிய மின்னஞ்சலில் காவல் துறை மிரட்டியதாக எங்கும் குறிப்பிடவில்லை. காவல் துணை ஆணையர் பாண்டியராஜனுக்கு விடுமுறை கொடுத்தது நான் தான். துணை ஆணையர் பாண்டியராஜன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக என்ன நடந்தது?
ஆந்திராவில், திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றிய நவீன், ரூ.40 கோடி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது சமீபத்தில் வெளிச்சத்திற்கு தெரியவந்தது. இதனை நவீனும் ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் நவீனை நேரில் வரும்படி கூறி போனில் அழைத்து விசாரித்ததாகவும், அப்போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என போலீஸாரிடம் நவீன் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர மேலும் சிலர் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு அவர் வீட்டருகே உள்ள குடிசையில் தூக்கில் தொங்கிய நிலையில் நவீன் சடமாகக் கிடந்தார். தகவல் அறிந்து வந்த புழல் போலீஸார், உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து நவீன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
மேலும், கடைசியாக நவீன் அவரது சகோதரி, அவர் பணி செய்த பால் நிறுவனத்துக்கும், 'என் மரணம் விரைவில் உங்கள் சாம்ராஜ்யத்தையே உலுக்கும் என்பதை நினைவில் கொள்க. எனக்குப் பின்னால் பல பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள்.' என்றெல்லாம் ஒரு கடிதத்தை எழுதி அதனை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.