சென்னை: 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு

சென்னை: 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு
சென்னை: 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு


2021ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகளை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்ப்பேராய புரவலருமான பாரிவேந்தர் அறிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாரிவேந்தர் “கொரோனா பேரிடர் காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகள் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா தவிர்க்கப்பட்டது. இப்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள காரணத்தால் தமிழ்ப்பேராய விருது வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் எப்படி அறியப்பட்டிருக்கிறோம் என்றால், பொறியியல் மற்றும் மருத்துவம் சார்ந்த பல்கலைக்கழகம். இன்னும் பல கல்விகளை மக்களுக்கு அளிக்கின்ற ஒரு பல்கலைக்கழகமாகவே அறியப்பட்டு வந்தது.

அதில் நாங்கள் எத்தகைய நிலையை அடைந்திருக்கிறோம் என்பதும், அதனால் பயனடைந்த தமிழ்நாட்டு மக்களும் இந்திய மக்களும் எவ்வளவு பயன் அடைந்துள்ளனர் என்பது லட்சங்களைத் தாண்டியது. 56 நாடுகளில் இருந்து இங்கு வந்து படிக்கிறார்கள். இங்கு படிக்கிற மாணவர்கள் பல மாநில மாணவர்களோடு பழகும் வாய்ப்பும் அந்த மக்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் இதுபோன்ற தமிழ் மன்றங்கள் பெரிதாக போற்றப்பட்டு, மாணவர்களுக்கு கவிதை எழுதும் உணர்வை ஏற்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் அந்த கவிதை தமிழ் சான்றோர்களின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டு சான்றிதழ் வழங்குவார்கள்.

நான் படித்த திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. நானும் பல நேரங்களில் கவிதைகளை எழுதி, உமருப்புலவர் பேரவையில் நான் கவிதையை அரங்கேற்றியிருக்கிறேன்.

ஒரு பொறியியல் மருத்துவம் சார்ந்த பல்கலைக்கழகத்தில் பெரும்பாலும் இதில் அக்கரை காட்டுவது அறிது, தமிழ் பற்று, தமிழ் ஆர்வத்தின் மீது இருக்கும் தொடர்ச்சிதான் இந்த தமிழ்ப்பேராய தோற்றம்.

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள், சிறந்த தமிழ்ச்சங்கம், சிறந்த கலைக்குழு, சிறந்த தமிழறிஞர் ஆகிய பிரிவுகளில் தமிழ்ப்பேராய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை பெற தகுதியானவர்களை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு தேர்வு செய்துள்ளது.

இதில், புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது அ.வெண்ணிலா, முத்துநாகு ஆகியோருக்கும், பாரதியார் கவிதை விருது கடவூர் மணிமாறனுக்கும், ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது பழனி அரங்கசாமிக்கும், பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது மற்றும் அப்துல்கலாம் தொழில்நுட்ப விருது ஆகியவை டில்லி பாபுக்கும் வழங்கப்படும்.

அதேபோல், முத்துத்தாண்டவர் தமிழிசை விருது டி.கே.எஸ்.கலைவாணனுக்கும், பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது சி.மகேந்திரனுக்கும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது சி.மகேஸ்வரனுக்கும், சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது மா.பூங்குன்றனுக்கும் வழங்கப்படும்.

பாரிவேந்தர் பைந்தமிழ் விருதை பா.வளனரசும், அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதை வெற்றிச் செல்வனும், தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதை ராஜபாளையம் மணிமேகலை மன்றமும், அருணாச்சல கவிராயர் விருதை திருபுவனம் ஆத்மநாதன் தமிழிசை குழுவும் பெறுகின்றனர்” என அறிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com