சென்னை | மாயமான ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி கடற்கரையில் சடலமாக மீட்பு
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோசப். இவரது மனைவி டெய்சி ராணி (41), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக டெய்சி ராணி மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் தேவாலயத்திற்குச் சென்று வந்தார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்தபோது டெய்சி ராணி தனது இளைய மகனை படிக்குமாறு கூறியுள்ளார்.
இதனால் தாய் மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த டெய்சி ராணி செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வெளியெ சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வீட்டை விட்டு வெளியேறிய டெய்சி ராணி ஆட்டோ ஒன்றில் ஏறி பல்லாவரம் வரை சென்றது பதிவாகி இருந்தது. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பெசன்ட் நகர் கடற்கரையில் டெய்சி ராணி சடலமாக மீட்கப்பட்டார். மன வேதனையில் இருந்த அவர் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.