ஆலந்தூர் - டிஎல்எஃப் வரை வேன் சேவை.. பயணிகளை கவர சென்னை மெட்ரோவின் பிளான்..!
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டிஎல்எஃப் தொழில்நுட்ப பூங்கா வரை பயணிகள் செல்லும் வகையில் வேன் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஎல்எஃப்-பில் பணிபுரியக்கூடிய தகவல் தொழில்நுட்பத் துறையினரின் கவனத்தை சென்னை மெட்ரோ ரயில் பக்கம் திருப்பவும், அதன் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்ற நோக்கிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த சேவையை தொடங்கியுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டிஎல்எஃப் தொழில்நுட்ப பூங்கா வரை பயணிகள் பயணிக்க 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Read Also -> ஹிந்தி தெரிந்த தமிழர்கள் எண்ணிக்கை உயர்வு
ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இருந்து, பட் ரோடு பேருந்து நிறுத்தம், சென்னை போர் நினைவு கல்லறை, சென்னை வர்த்தக மையம், மியாட் மருத்துவமனை, எம்.ஜி.ஆர் தோட்டம் வழியாக டி.எல்.எஃப் ஐ.டி பார்க் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக ஒரு வேன் மட்டுமே ஆலந்தூர் மெட்ரோவில் இருந்து டி.எல்.எஃப் வரை இயக்கப்படவிருக்கிறது. பயணிகளின் வருகையை பொருத்து, இணைப்பு வாகனத்தின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும் என்றும், சென்னையின் பிற இடங்களிலும் இச்சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.