மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 2 ஆவது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதால் சாலைகள் வெள்ளம் போல் காட்சியளிக்கின்றன. சென்னை நகரமே மழைநீரில் தத்தளிக்கிறது. வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூரில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, போன்ற இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளதாவது, “15 இடங்களில் கனமழையும், 59 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் அதிகனமழையும் பதிவாகியுள்ளது. பலத்த காற்றைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் அதிகாலை 4.15 மணியளவில் 88 கிமீ வேகத்தில் பலத்த காற்றும், நுங்கம்பாக்கத்தில் அதிகாலை 3.20 மணியளவில் 71 கிமீ வேகத்தில் பலத்த காற்று பதிவாகியுள்ளது.
அடுத்த இருதினங்களைப் பொருத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொருத்தவரை அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.
5 ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்புள்ளது. பலத்த காற்றுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை இன்று இரவு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்திலும் அவ்வப்போது 70 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்” என தெரிவித்துள்ளார்.