அதிகபட்சமாக ராயபுரத்தில் 571 பேருக்கு கொரோனா: சென்னை மண்டல வாரியாக முழு விவரம்
சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மட்டும் மேலும் 279 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் சென்னையில் மட்டும் 3,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் ஆவர். இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக ராயபுரத்தில் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் 563 பேரும், திருவிக நகரில் 519 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தில் இருந்தது. இன்று மீண்டும் ராயபுரத்தில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா நோய்ப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6,535 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை சிகிச்சையில் உள்ளவர்கள் மட்டும் 4,464 பேர் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் குணமடைந்து 219 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.