அதிகரித்து வரும் கொசுத் தொல்லை.. ஆய்வகம் அமைக்க சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி ஆய்வகம் அமைக்க முடிவு செய்துள்ளது. 9ஆவது மண்டலத்தில் கடந்த ஆண்டு 59 லட்சம் புகார்கள் வந்துள்ள நிலையில், இந்த ஆண்டு 66 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. இதனால், கொசுக்களின் வகையை கண்டறிய பெரியமேடு பகுதியில் ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் குமரகுருபரன் உறுதி அளித்துள்ளார்.
சென்னையில் நாளுக்கு நாள் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு மாநகராட்சிக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்கள் குறித்த தரவுகளே சாட்சியாகும். மாநகராட்சியின் 9ஆவது மண்டலத்தில் கடந்த ஆண்டு 59 லட்சத்து 94 ஆயிரம் பேர் கொசுத் தொல்லை குறித்து புகார் அளித்திருக்கின்றனர். நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை 9 ஆவது மண்டலத்தில் இருந்து 66 ஆயிரத்து 483 பேர் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையின் கீழ் 40 ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட பூச்சிகள் தடுப்புப் பிரிவு மலேரியாவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. 2001ஆம் ஆண்டு சிக்குன்குனியா தடுப்புப் பணியையும் மேற்கொண்டது.
ஆனால், கொசுக்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள கொசுக்களின் ஹாட் ஸ்பாட் ஆன சென்னையில் ஆய்வகம் ஏதும் இல்லை. கடந்த 2025ஆம் ஆண்டு பெரியமேடு பகுதியில் கொசுக்களின் வகையை கண்டறிய ஆய்வகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சில அதிகாரிகள் இதனை தடுத்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஆணையர் குமரகுருபரன், கொசுத் தடுப்புப் பணிக்காக ஆய்வகம் அமைக்க அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும், நடப்பாண்டிலேயே அதனை விரைந்து கட்டமைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

