சென்னையின் பூர்வ குடிமக்கள் வசிக்கும் கண்ணகி நகரின் அவல நிலை.. கவனிக்கப்படுமா?
சென்னை கண்ணகி நகரில் பூர்வ குடிமக்கள் எதிர்கொள்ளும் அவல நிலை கவலைக்குரியது. அறுந்து கிடக்கும் மின்சார வயர்கள், பாதுகாப்பற்ற மின் பெட்டிகள், துர்நாற்றம் கொண்ட குடிநீர் போன்ற பிரச்சனைகள் அங்கு வாழும் 23,000 குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை சவாலாக மாற்றியுள்ளன. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காணும் இடமெல்லாம் அறுந்து கிடக்கும் மின்சார வயர்கள், பாதுகாப்பற்ற வகையில் காணப்படும் மின் பெட்டிகள், திறந்த வெளியில் மின்மாற்றிகள், துர்நாற்றத்துடன் வரும் குடிநீர், காரை பெயர்ந்து பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள்.... இவை தான் சென்னை - கண்ணகி நகரின் இன்றைய நிலை. சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த, பூர்வ குடிமக்களை கண்ணகி நகரில் குடியமர்த்தியது அரசு. இங்கு வசிக்கும் சுமார் 23,000 குடும்பத்தினர், தங்களுக்கு அன்றாட வாழ்க்கையே பெரும் சவால்தான் என்கின்றனர்.
கண்ணகி நகரைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி, அதிகாலையில் பணிக்கும் செல்லும் போது சாலையில் அறுந்துகிடந்த மின்சாரம் பாய்ந்து அண்மையில் உயிரிழந்தார். அதற்கு மின் வாரியத்தின் அலட்சியமே, காரணம் என்கிறார்கள் கண்ணகி நகர் மக்கள். அறுந்து கிடக்கும் மின் வயர்களால் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை, பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல, சுத்தமான குடிநீர் கிடைப்பதே பெருங்கனவாக இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் அவர்கள்.
தங்களது புகார்களை உடனடியாக கவனித்திருந்தால் துயரங்களை தவிர்த்திருக்கலாம் என்பது அவர்களது ஆதங்கம். இனியாவது அரசு, தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வருமா என காத்திருக்கின்றனர் கண்ணகி நகர் மக்கள்.