“திருமணமான பெண் இறந்தால் வாரிசாக பெற்றோரை சேர்க்க முடியாது” - சென்னை உயர்நீதிமன்றம்
திருமணத்திற்குப் பின்னர் ஒரு பெண் இறந்தால், அவரது வாரிசு சான்றிதழில் பெற்றோரை சேர்க்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை அமைந்தகரையை சேர்ந்த கிருஷ்ணா என்பவரின் மனைவி விஜய நாகலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு விஜய நாகலட்சுமி இறந்துவிட்டார். அரசு சார்பில் வழங்கப்பட்ட அவரது சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழில், விஜய நாகலட்சுமியின் தாயார் சேகரியின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. மாமியாரின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாவட்ட ஆட்சியருக்கும், அமைந்தகரை வட்டாட்சியருக்கும் கிருஷ்ணா மனு அனுப்பினார்.
அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தனது மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணா வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், இந்து வாரிசுரிமை சட்டப்படி ஒரு ஆண் இறந்துவிட்டால் மனைவி, குழந்தை மட்டுமல்லாமல், அவரது தாயாரும் சட்டப்பூர்வ வாரிசாகவே கருதப்படுவதாக தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்து வாரிசுரிமை சட்டப்படி மணமான ஒரு ஆண் இறக்கும்போது மட்டுமே இது பொருந்தும் என்றார். அத்துடன் மணமான ஒரு பெண் இறந்துவிட்டால் அவரது கணவரும், குழந்தைகளும் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசுகள் ஆக முடியும் எனவும், இறந்த பெண்ணின் தாய், தந்தையை சட்டப்பூர்வ வாரிசாக கருத முடியாது எனவும் உத்தரவிட்டார்.
மேலும், விஜய நாகலட்சுமியின் வாரிசு சான்றிதழை ரத்து செய்ததுடன், அவரது கணவர் கிருஷ்ணா மற்றும் குழந்தை பெயர்கள் மட்டுமே கொண்ட புதிய வாரிசு சான்றிதழை பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.