அமைச்சர் வேலுமணி மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித்துறை முறைகேடுகள் தொடர்பாக தன்னைத் தொடர்புபடுத்தி பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரிய அமைச்சர் வேலுமணியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்பு பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்குவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராகவும், டெண்டர் ஒதுக்கீடு பெற்ற 9 நிறுவனங்களுக்கு எதிராகவும் அறப்போர் இயக்கம் ஆவணங்களை வெளியிட்டது.
இதனிடையே, தங்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்ப அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தங்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக தலா ஒருகோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் அமைச்சர் வேலுமணியும், 9 நிறுவனங்கள் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த இடைக்கால மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மனுதாரர்களுக்கு எதிராக அறப்போர் இயக்கம் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆவண ஆதாரங்களுடன் முகாந்திரம் இருப்பதால் தற்போதைய நிலையில் தடைவிதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இடைக்கால உத்தரவு என்பது பிரதான வழக்கின் விசாரணையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.