ரயில்களை வழக்கம்போல் இயக்க உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
அனைத்து ரயில்களையும் வழக்கம்போல் இயக்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்சந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “தற்போது 65 சதவீத ரயில் இயக்கப்படுகின்றன. முழுமையான ரயில்கள் எப்போது இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் இதுவரை தெரிவிக்கவில்லை.
கொரோன குறைந்துவரும் நிலையில் விமான போக்குவரத்து, குளிர்சாதன பேருந்து என அனைத்தும் 100 சதவீதம் இயக்கப்படும் நிலையில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அதிகம் பயன்படுத்தும் ரயில்கள் மட்டும் இயக்கப்படவில்லை. எனவே தமிழகம் முழுவதும் ஓடும் அனைத்து ரயில்களையும் இயக்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் ரயில்களை முழுமையாக இயக்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிடமுடியாது. அதேசமயம் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து எப்போது ரயில்களை இயக்கலாம் என ரயில்வே நிர்வாகம்தான் முடிவெடுக்க முடியும்” எனத் தெரிவித்தனர்.