தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஸ் நடத்தவது தொடர்பாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழிப் பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும், மழலையர் வகுப்புகள் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக தமிழ் வழி வகுப்புகள் பயிற்றுவிக்கும் பள்ளிகளில், ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்புகளை நடத்துவதே சிறந்தது என்று கூறினர்.
மேலும், போட்டித் தேர்வுகளில் ஆந்திரா, கேரளா மாநிலங்களே முன்னிலை வகிக்கின்றன என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். எனவே, ஆரம்ப, தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகளை நடத்துவது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை விரிவான பதில் மனுவாக டிசம்பர் 6ஆம் தேதி தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.