\
“கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது” - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

“கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது” - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

“கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது” - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
Published on

சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு முறையற்ற போராட்டங்கள் மற்றும் அனுமதியற்ற பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனவரி 13 முதல் 28 வரை அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனித சங்கிலி உள்ளிட்டவை நடத்த தடை விதித்தும், போராட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன்பே அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்தும் காயத்ரி கந்தாடை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர அதிகாரம் உள்ளது என மனுதாரர் தரப்பும், நகர காவல்துறை சட்டத்தை பின்பற்றி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த அதிகாரம் இல்லை என காவல்துறை தரப்பும் வாதாடியது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ராஜமாணிக்கம், சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு முறையற்ற போராட்டங்கள் மற்றும் அனுமதியற்ற பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது எனவும் கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தார். மேலும், விசாரணையை நாளை மறு தினத்திற்கு ஒத்திவைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com