கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் காவல்துறை மேல் விசாரணை நடந்து வருவதால், சாட்சி விசாரணையை நடத்தும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12அம் தேதி மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் காவல்துறை மேல்விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீலகிரி நீதிமன்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிடக்கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, கூடுதல் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சாட்சி விசாரணையை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும் என்பதால், சாட்சி விசாரணையை தொடங்க அனுமதிக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி ஆகியோரையும் சாட்சிகளாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதால், தங்களை இணைக்கக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என மூவர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போது இந்த வழக்கில் மேல் விசாரணை நடைபெற்று வருவதால், சாட்சி விசாரணையை நடத்த உத்தரவிட முடியாது எனக் கூறி, மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

