அரசுக்கு நிதி தேவை.. மின் கட்டணத்தை செலுத்துங்கள் - உயர்நீதிமன்றம்

அரசுக்கு நிதி தேவை.. மின் கட்டணத்தை செலுத்துங்கள் - உயர்நீதிமன்றம்
அரசுக்கு நிதி தேவை.. மின் கட்டணத்தை செலுத்துங்கள் - உயர்நீதிமன்றம்

பொதுமுடக்கத்தில் முந்தைய மின் கட்டண தொகையின் அடிப்படையில் புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக 2 மாதத்திற்கு ஒருமுறை அளவிடப்படும் மின் கணக்கீடு செய்யப்படவில்லை. இதனால் வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, 4 மாதங்களுக்கும் சேர்த்து பயன்படுத்தப்பட்ட மின்சார அளவீட்டிற்கான கட்டணத்தில், முந்தைய மாத கட்டண தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்தது.



இந்த உத்தரவை ரத்து செய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி கட்டண ரசீதாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான தனி ரசீதாகவும் நிர்ணயித்து உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது மின் வாரியம் மேற்கொள்ளும் மின் கட்டண கணக்கீடுப்படி, பொது மக்கள் கூடுதல் தொகை செலுத்த நிர்பந்திக்கபடுவதாக கூறி, அதற்கான விளக்க மனு ஒன்று மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மின்சார சட்ட விதிகளின்படி, பொதுமுடக்க காலத்தின் போது, முந்தைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுமே தவிர ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததாலும், 8 முதல் 20 மணி நேரங்கள் வரை மின்சாரத்தை அயன்படுத்தியதாலும் மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாக விளக்கமளித்தார்.

அரசு தரப்பின் விளக்கத்தை ஏற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் மின் கட்டண கணக்கீட்டு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தனிப்பட்ட நபர்களின் குறைகள் இருப்பின் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com