“நில ஆக்கிரமிப்பாளர்களிடம் கருணை கூடாது” - உயர்நீதிமன்றம்
அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு கருணை காட்டக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கோவை மாவட்டம் இருப்பாநத்தம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், தனது குடும்பச் சொத்து நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார். அந்த நிலம் புறம்போக்கு நிலம் எனக் கூறி பட்டா வழங்க மறுக்கப்பட்டதால், அதை எதிர்த்து லட்சுமணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சமீபகாலமாக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது குறித்து வேதனை தெரிவித்த அவர், பட்டா வழங்கும் முன் ஆவணங்களை முறையாக சரிபார்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அரசு நிலத்திற்கு பட்டா பதிவு செய்து கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். அரசு நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றை ஆக்கிரமித்தவர்களுக்கு கருணை காட்டக்கூடாது எனவும், அரசு நிலங்களை மக்கள் நலனுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.

