‘சொத்து வரியை உயர்த்தாமல் மேயர் பதவியை பிடிக்க மட்டும் ஆர்வமா ?’ - அரசியல்வாதிகளை சாடிய உயர்நீதிமன்றம்
சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சியினர், மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுவதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை வசூல் செய்ய விதிகளை வகுக்கும்படி மாநகராட்சிக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
‘ஒரு கேப்டனுக்குக் கூட சொல்ல மாட்டீங்களா?’ - ஆர்சிபி செயலால் அதிர்ச்சி ஆன விராட் கோலி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, கடந்த 2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடிவெடுத்தது ஏன் ? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அவற்றுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி ஆணையர் ஆஜராக முடியாதது குறித்து அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதையடுத்து பேசிய நீதிபதிகள், சொத்துவரியை உயர்த்தாமல் கடந்த 20 ஆண்டுகளாக அரசு தூங்கி கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தனர். 20 ஆண்டுகளில் 4 முறை வரியை உயர்த்தி இருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மேயர் பதவியை பிடிப்பதில் மட்டுமே அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுவதாக சாடினர்.
மாநகராட்சி பகுதியில் இல்லாதவர்கள் தான் அதிகமாக சொத்து வரி செலுத்துவதாகவும், சொத்து வரியை உயர்த்தாத காரணத்தால் தான் வெளியூரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் முதலீடுகள் செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தனர். மேலும் சொத்துவரி உயர்த்தாதது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.