மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் முதுநிலைப் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவ மேற்படிப்புக்கான புதிய பட்டியலை தயார் செய்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ள உயர்நீதிமன்றம் மாணவர்களின் நலன் கருதி புதிய தரவரிசை பட்டியலை 3 நாட்களுக்குள் வெளியிடவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு மீண்டும் கவுன்சிலிங் நடத்தப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையைத்தான் தமிழக அரசு பின்பற்றியது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் மருத்துவ மேற்படிப்புகளுக்கு அரசு மாணவர் சேர்க்கையை நடத்தியது. ஆனால் முதுநிலை மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கே ஊக்க மதிப்பெண் வழங்கப்படுவதாகவும் அரசின் இந்த நடவடிக்கையால் அரசு மருத்துவர்களுக்கே நிறைய சேர்க்கை இடங்கள் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்ததோடு வழக்கும் தொடரப்பட்டிருந்தது.