எஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்?: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
பெண் செய்தியாளர்கள் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில், எஸ்.வி.சேகர் மீது ஏன் காவல்துறை பாரபட்சம் காட்டுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதுதொடர்பான வழக்கு நீதிபதி எஸ்.ராமதிலகம் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும், இன்றே சரணடைய உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. தவறு என்று தெரிந்ததும் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பதிவை நீக்கிவிட்டார் என்றும், இணைப்பு மனுக்களில் பதிலளிக்கும் வரை கைது செய்யக் கூடாது என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
எஸ்.வி.சேகருக்கு எதிராக பல புகார்கள் கொடுக்கப்பட்டாலும் தலைமைச் செயலாளர் தலையீட்டால் இன்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆட்சேபனை மனுக்களை தள்ளுபடி செய்து முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம் என்றும் எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எஸ்.வி.சேகர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், என்ன விசாரணை நடந்துள்ளது எனவும் மனுதாரர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணை நடைபெற்று வருவதாகவும், அசல் பதிவை கேட்டு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது, இதேபோன்ற குற்றச்சாட்டு மற்ற பொதுமக்களுக்கு எதிராக வரும் போது எடுக்கப்படும் நடவடிக்கைக்கும், சேகர் மீதான புகாருக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறதோ என்று நீதிபதி எஸ்.ராமத்திலகம் கேள்வி எழுப்பினார். ஊடகத்தினரை கைது செய்யும்போது, சேகர் மீது ஏன் வேறு விதமாக கையாளப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.