சாதி, மதம் இல்லையென சான்றிதழ்.. உரிய அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி, திருப்புத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், தனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்த சலுகைகளையும் கேட்க போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.
சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அதிகாரம் அளித்து எந்த உத்தரவும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.
உரிய அரசாணை பிறப்பிக்க பரிந்துரை..
இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், என் செந்தில்குமார் அடங்கிய அமர்வு, ஏற்கனவே திருப்பத்தூர், கோவை, அம்பத்தூர் தாசில்தார்கள் சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கி இருப்பதாக சுட்டிக்காட்டி, மனுதாரருக்கு அது போல் சான்றிதழை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், சாதிய ரீதியிலான பாரபட்சத்தை தடுக்க வேண்டும் என போராடி வரும் நிலையில், சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரும் மனுதாரருக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், சாதி மதம் இல்லை என சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு பரிந்துரைத்தனர்.
நாட்டில் நிலவும் சாதி மத பாகுபாடுகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசியல் சாசனம் சாதிய ரீதியிலான பாகுபாடுகளை தடை செய்துள்ள போதிலும், சமூக வாழ்க்கையில், அரசியலில், கல்வியில், வேலை வாய்ப்பில், சாதி மதம் இன்னுமும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.