சத்துணவளிக்க அங்கன்வாடிகளை திறக்க ஆலோசிக்கவும்: அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

சத்துணவளிக்க அங்கன்வாடிகளை திறக்க ஆலோசிக்கவும்: அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை
சத்துணவளிக்க அங்கன்வாடிகளை திறக்க ஆலோசிக்கவும்: அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை
சத்துணவு கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் தொடக்கப் பள்ளிகள் அங்கன்வாடிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவியல் பூர்வ ஆலோசனைகளை பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பள்ளிகள் இயங்கும்போது தரப்படும் சத்துணவை தற்போதைக்கு சமைக்கப்பட்ட உணவாக வழங்குமாறு ‘சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப்’ என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு திட்டம் மூலம் பயன்பெற்றுவந்த மாணவர்கள் தற்போது சாப்பாடு விஷயத்தில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலரெல்லாம் பிறரிடம் உணவு பிட்சை கேட்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்கும் சில பெற்றோர், பொருளாதார பாதிப்பு காரணமாக விற்று விடுகின்றனர்” என வாதத்தின்போது கூறியிருந்தார். பிரச்னைகளை சரிசெய்ய அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து, அவற்றின் மூலம் மாணவர்களுக்கு கொரோனா சூழலிலும் சத்துணவை சமைக்கப்பட்ட உணவாக அரசு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என யோசனை தெரிவித்தார்.
இந்த வாதத்தை தொடர்ந்து, மனுதாரரின் இந்த யோசனை குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, கொரோனா தாக்கம் தணிந்துள்ளதாலும், மூன்றாவது அலை தாக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக எந்த கணிப்பும் இல்லாததாலும், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல்பூர்வமாக ஆலோசனைகளை பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
குறிப்பாக அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாணவர்களுக்கு சத்துணவு சென்றடையச் செய்வதற்கான மாற்று திட்டத்தை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முகேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com