துப்பாக்கிமுனையில் இருவர் கடத்தல்: சென்னையில் பரபரப்பு
சென்னையில் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், போலீஸ் எனக் கூறி துப்பாக்கி முனையில் இருவரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஒரு காரில் இருவர் வந்து கொண்டிருந்தனர். அந்த காரை, நான்கு கார்களில் வந்த 5 பேர் திடீரென வழி மறித்தனர். பின்னர் காரில் இருந்த இரண்டு நபர்களிடம், தாங்கள் போலீஸ் எனக்கூறி தலையில் தாக்கி துப்பாக்கி முனையில் மற்றொரு காரில் கடத்திச் சென்றனர். பட்டப்பகலில் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, கடத்திச் செல்லப்பட்டவர்கள் யார்? கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தல் நடைபெற்றது என்று விசாரித்து வருகின்றனர். கடத்தலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் காவல்துறை சீருடை அணிந்திருந்ததாகவும், மற்ற நான்கு பேர் சாதாரண உடை அணிந்திருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

