சென்னை அண்ணா சாலையில் உள்ள மருந்தகம் ஒன்று முகக்கவசங்களை பதுக்கவைத்திருந்த காரணத்தால் சீல் வைக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரர் மருத்துவமனைக்கு எதிரே உள்ள மருந்து கடை ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மருந்தகத்துக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான முகக்கவசங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து முகக்கவசங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.
இதுபோன்று மருந்தகங்களில் மருத்துவ உபகரணங்கள் பதுக்கி வைப்பது அல்லது அதிக விலைக்கு விற்பது குறித்து தெரியவந்தால் 104 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.