சென்னை | அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை தரமணி சாலை வேளச்சேரியில் இருந்து தரமணி நோக்கி அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு 1 மணியளவில் சென்ற போது சாலைத் தடுப்பில் மோதி இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தலைக் கவசம் அணியாததால் தலையில் அடிபட்டதால் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த தேவதர்ஷன் (19), என்பவர் வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
இவர், இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.