பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதில் ஸ்ரீபெரும்புதூர் பன்னூர் கிராமத்தைச் சேர்ந்த கிளமென்ட் என்பவரின் மகன் மார்ட்டின் சவுரி்யப்பன்(37). இவர் இதே சர்ச்சில் பாதிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இதே சர்ச்சில் உள்ள ஒரு அறையில் தங்கி படித்து வருவதாக கூறபடுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல தனது அறைக்குச் சென்ற மார்டின் சவுரியப்பன் இன்று காலை சர்ச்சில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சந்தேகமடைந்த மற்ற பாதிரியார்கள் மார்டினின் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு உள்பக்கமாக அவரது அறையின் கதவு தாழிடப்பட்டு இருந்தது.
வேறு ஒரு சாவியை வைத்து அறையை திறந்து பார்த்தனர். அப்போது அறையிலிருந்த மின் விசிறியில் மார்டின் சடலமாக இருந்தார். இதுகுறித்து சர்ச் பாதிரியார்கள் வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற வியாசர்பாடி போலீசார் மார்டினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த ஒரு வாரமாகவே மார்டின் அனைவரிடமும் சகஜமாக பேசாமல் மனச்சோர்வுடன் இருந்ததாகவும் எதனால் இந்த முடிவுக்கு வந்தார் என தெரியவில்லை எனவும் அவருடன் பழகியவர்கள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.