சென்னையில் கனமழை; தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
இதற்கிடையே அடுத்த சில மணி நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம். திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே கனமழையால் சென்னை சாலைகள் குளம்போல் காட்சி அளிக்கின்றன. சாலையில் தேங்கியுள்ள நீரால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னையில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது