சென்னை | திட்டிய நடத்துநரை பழிவாங்க மாநகர பேருந்தை கடத்திச் சென்ற நபரால் பரபரப்பு
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை 2 மணிக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மாநகர பேருந்து (தடம் எண் 109) மோதியது. இதில், மாநகர பேருந்து நம்பர் பிளேட் மட்டும் சேதமடைந்த நிலையில், லாரிக்கு எந்தவித சேதமும் இல்லை. இதையடுத்து லாரி டிரைவர் அந்த பகுதியில் நின்றிருந்த ரோந்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
மாநகர பேருந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது குடிபோதையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து இந்த பேருந்தை ஓட்டி வந்தேன் என போலீசாரிடம் சொல்லி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். இதையடுத்து திருவான்மியூர் போலீசாருக்கு நீலாங்கரை ரோந்து போலீசார் தகவல் தெரிவித்தனர்.
திருவான்மியூர் போலீசார், போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு குடிபோதையில் பேருந்தில் அமர்ந்திருந்த பெசன்ட் நகரைச் சேர்ந்த ஆபிரகாம் (33), என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இவர், நேற்று காலை கூடுவாஞ்சேரிக்கு பேருந்தில் சென்ற போது, சில்லறை கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பேருந்து நடத்துநர், ஆபிரகாமை ஒருமையில் பேசியதோடு கூடுவாஞ்சேரி செல்லும் வைர் தொடர்ந்து திட்டிக் கொண்டே வந்துள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த ஆபிரகாம், பயணிகளை அவமதிக்கும் போக்குவரத்து கழக ஓட்டுநர் நடத்துனர்களுக்கு பாடம் புகட்ட முடிவு செய்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு பணி முடிந்து 9 மணிக்கு திருவான்மியூர் வந்துள்ளார். திருவான்மியூரில் மது வாங்கி குடித்துவிட்டு பேருந்து நிலைய வாசலிலேயே படுத்திருந்துள்ளார். இதைத் தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு பேருந்தை எடுத்துச் சென்றபோது காவலாளி தூங்கிக் கொண்டிருந்தார் என ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போதை தெளிந்தவுடன் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த திருவான்மியூர் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.