எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை கடத்த முயன்றவருக்கு தர்ம அடி
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தந்தையுடன் நடந்து சென்ற சிறுமியை கடத்த முயன்றவரை அடித்து உதைத்த பொது மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் பாபு என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரைப் பார்ப்பதற்காக தனது 10 வயது மகளுடன் மருத்துவமனைக்கு ஆனந்த் பாபு சென்றுள்ளார்.
அப்போது தந்தையுடன் நடந்து சென்ற மகளை பிடித்து இழுத்த ஒருவர், சிறுமியை மின்படிக்குள் தள்ளி கடத்த முயன்றுள்ளார். அதனைக் கண்டு ஆனந்த் பாபு கூச்சலிட அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்து அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிடிபட்டவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் காந்தி என்பதும் அவர் மது போதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சஞ்சய் காந்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.