கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்
மாமல்லபுரம் அருகே சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம். மற்றொரு பெண் பலி மதுபோதையில் விபத்து நடந்ததா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த ஈசிஆர் சாலை சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் அதிவேகமாக வந்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை கண்ட சக வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதில், காரில் பயணித்த நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் யாஷிகாவின் தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர், யாஷிகா ஆனந்தின் நண்பர் என்பதும் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.