இன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த ஒருவாரகாலமாக விட்டுவிட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் குறைவாகவே இருந்தது. எனினும் மாலை நேரங்களில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, கோயம்பேடு, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதேபோல் தண்டையார்பேட்டை, வண்டலூர், திருநின்றவூர் பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் திருவள்ளூர், திருத்தணி, விழுப்புரம், போன்ற இடங்களில் மாலையில் மழை பெய்ததால் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்தப்படி சென்றனர்.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரீரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழையும், திருச்சி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.