வெப்பச் சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 8-ஆம் தேதி கேரளா மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, வாயு புயல் காரணமாக வடக்கு நோக்கி நகர்ந்தது. இதனால் மழை தடைப்பட்டு, தமிழகத்தில் அனல் காற்று வீசியது. இந்நிலையில் ராயல்சீமா மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை நகர்ந்ததால் தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை குறைந்து மழை பெய்து வருகிறது.
இந்தச் சுழலில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர்,காஞ்சிபுரம், சென்னை,விழுப்புரம், கடலூர், காரைக்கால், புதுவை, நாகை, தஞ்சை, இராமநாதபுரம், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்,சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக பட்சமாக 4 செ.மீ வரை மழை பெய்துள்ளது. இதனிடையே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.