பட்ட பகலில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: வைரல் வீடியோ
கோவையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் இளைஞர்கள் இருவர் வழிப்பறியில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் இருகூர் தீபன் நகரில் சத்தியவள்ளி என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றதும் சத்தியவள்ளியின் கவனத்தை திசைதிருப்பிய கொள்ளையர்கள், அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்று தப்பியோடி விட்டனர்.
இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வந்த இளைஞர் ஒருவர், பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சிப்பதும், அதனைத் தடுப்பதற்காக அவர் போராடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வழிப்பறி குறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.