`சமூகநீதியின் ஹீரோ மோடிதான்! ஸ்டாலினுக்கு அதுபற்றி பேச தகுதியே இல்லை’- எல்.முருகன் கருத்து

`சமூகநீதியின் ஹீரோ மோடிதான்! ஸ்டாலினுக்கு அதுபற்றி பேச தகுதியே இல்லை’- எல்.முருகன் கருத்து
`சமூகநீதியின் ஹீரோ மோடிதான்! ஸ்டாலினுக்கு அதுபற்றி பேச தகுதியே இல்லை’- எல்.முருகன் கருத்து

“தமிழகத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு முக்கிய இலாகா கொடுக்கப்படவில்லை. ஆனால் தானே சமூக நீதி காவலர் என முதலமைச்சர் கூறிக்கொள்கிறார். உண்மையில், சமூக நீதி பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் கிடையாது” என என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசினார். அவர் பேசுகையில், மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சேவை, நல்லாட்சி, ஏழை நலன் என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ளார். 2ஜி, நிலக்கரி ஊழல் என தினந்தோறும் ஊழலாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியா இருந்தது. இப்போது அப்படியல்ல

ஜன்தன் வங்கி கணக்கு மூலம் பல கோடி பேருக்கு கணக்கு தொடங்கி வைத்தவர் நமது பிரதமர் மோடி. இதன் மூலம் பயனாளிகள் நேரடியாக வங்கி கணக்கை பயன்படுத்துகின்றனர். போலவே ஜல் ஜீவன் குடிநீர் திட்டம், பிரதமர் வீடு வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு வருடம் ரூ.6,000, ரூ.5 லட்சம் பெருமானமுள்ள மருத்துவ காப்பீடு என பல விஷயங்களை பிரதமர் செய்துள்ளார். இது வரலாற்று சாதனை. குறுஞ்செய்தி மூலம் 10 நிமிடத்தில் இலவச கேஸ் இணைப்பை பெறும் வசதியை ஏற்படுத்தி தந்தது மோடி அரசுதான். 

இந்திய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்திய தேசிய கல்வி கொள்கையை தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் திட்டம் கொண்டு வரப்பட்டது. நாட்டின் உள்கட்டமைப்பை உணர்ந்து தேசிய நான்கு வழிச்சாலையை அதிவிரைவு சாலையை மாற்றியது, ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ ரயில் என பல திட்டங்களை வழங்கியவர் மோடி. இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு இலவசமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியது. சுயசார்பு பாரதம் மூலம் மேக் இன் இந்தியா, நமது பொருட்களை உலக நாடுகளுக்கு அனுப்பியது. 11 மருத்துவ கல்லூரிகளை தமிழத்திற்கு வழங்கியும், மதுரையில் எய்ம்ஸ் தந்தும் நமக்கு பெருமை தந்தவர் மோடி.

இப்படியாக பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி என்பது தேசத்திற்கு சொன்னதை செய்து காட்டியுள்ளோம். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கி சாதனை படைத்துள்ளோம். இஸ்லாமிய சகோதரிகள் துயரங்களைத் துடைக்க முத்தலாக் முறைக்கு முடிவு கட்டியது. இப்படி எண்ணில் அடங்காத சாதனையை 8 ஆண்டுகளில் மோடி செய்துள்ளார். ஆனால் திமுக இப்போதுவரை தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளனர். ஆயிரம் ரூபாய் தருவதாக தாய்மார்களிடம் ஓட்டு வாங்கிய மு.க ஸ்டாலின் தற்போது வாய் திறக்கவில்லை. சுய உதவி குழு கடன் தள்ளுபடி , நகை கடன் தள்ளுபடி என எதுவமே வாய் திறக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படாமல் படிப்படியாக அதிகரித்துள்ளது. திராவிட மாடல் என்பது புரியவில்லை. தேசியமும் தெய்வீகமும் கொண்ட ஆன்மீக பூமி இது.

சமூக நீதி காவலர் முதலமைச்சர் என கூறுகின்றார். சமூக நீதி பற்றி ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் கிடையாது. கர்நாடகத்தில் முதல்வருக்கு அடுத்தபடியாக உள்ள அமைச்சர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் பட்டியல் இனத்தவர்களுக்கு அமைச்சர் பதவியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த அமைச்சர் கடைசி இடத்தில் தான் உள்ளனர். பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சருக்கு பொதுப்பணி, வருவாய் உள்ளிட்ட துறைகளை ஏன் வழங்கவில்லை? இதுவா சமூக நீதி? உண்மையான சமூக நீதியின் தலைவர், ஹீரோ மோடி ஆவார்.

வானோக்கு வாழும் உலகமெல்லாம்

கோனோக்கி வாழும் குடி

எனும் குறளுக்கு ஏற்ப நேர்மையான, வீரமான ஆட்சியை வழங்கி வருவது மோடிஜி ஆவார்.

2047 ல் இந்த நாடு ஏழை இல்லாத நாடாகவும், பொருளாதார வளர்ச்சி உள்ள நாடாகவும், வல்லரசு காட்டும் பாதையை நோக்கி இப்போதே நாம் முன்னேறிக் கொண்டுள்ளோம். அதற்காக வான்வழி , கப்பல்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றார். எந்த நாட்டிற்கு போனாலும் மோடி சென்றாலும், அவருக்கு வரவேற்பு மட்டுமல்லாமல் அவர் தங்கள் நாட்டுக்கு என்ன ஆலோசனை சொல்வார் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்றார்.

இரா.நாகேந்திரன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com