டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்து விட்டது - மத்திய அரசு தகவல்
டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்து விட்டதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆபாச இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை, ஆன் லைன் வகுப்புக்களை நடத்த தடை விதிக்கக் கோரியும், மாணவர்களன் உடல்நலம் கருத்தில் கொள்ள கோரியும் தொடர்ந்த வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இணையதள சேவை குறைபாட்டால் பெரும்பாலான நேரங்களில் உரிய நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத சூழல் நிலவுவதாக புகார் தெரிவித்தனர். 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே பாடங்கள் கற்பிப்பது தவிர்க்க முடியாது என்கிற போதும் மற்ற மாணவர்களுக்கு இது தேவையற்ற சுமையாக அமைந்துள்ளதாகவும், மலை பகுதிகளிலும் குக்கிராமங்களிலும் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.
ஆன்லைன் வகுப்பு நேரத்தை 2 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனவும், தொலைக்காட்சியின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மின்சார தட்டுப்பாட்டால் அதிலும் குளறுபடி ஏற்படுவதாக தெரிவித்தனர். ஆன்லைன் வகுப்புகளுக்கு பதிலாக பாடத்திட்டத்தை பள்ளியின் இணைய தளத்திலோ அல்லது இமெயில் மூலமோ அனுப்பி மாணவர்களை படிக்க வைக்கலாம்,
அல்லது ஏற்கனவே ஆசிரியர்கள் பாடம் நடத்தி பதிவு செய்த வீடியோக்களை போட்டு காண்பிக்கும் வழிவகையை பின்பற்றலாம் எனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஊரடங்கால் பெற்றோர்கள் வருமானம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், ஆன்லைன் வகுப்புகளுக்கு என பெற்றோர்கள் மாதம் ஒன்றுக்கு 2,500 ரூபாய் செலவழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்து விட்டதாகவும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மாணவர்களுக்கு எந்த ஒரு சுமையும் ஏற்படாது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

