‘உயர் அதிகாரியா இருப்பாரோ’ - போலீஸை மிரளவைத்த போலி அதிகாரி

‘உயர் அதிகாரியா இருப்பாரோ’ - போலீஸை மிரளவைத்த போலி அதிகாரி

‘உயர் அதிகாரியா இருப்பாரோ’ - போலீஸை மிரளவைத்த போலி அதிகாரி
Published on

சென்னையில் மத்திய அரசின் அதிகாரிபோல நடித்த தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அபிராமபுரம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது மத்திய அரசு முத்திரை பதிக்கப்பட்ட வாகனம் ஒன்று அப்பகுதியில் வந்துள்ளது. அந்த வாகனம் பார்ப்பதற்கு சற்று விசித்திரமாக இருந்துள்ளது. அதன் முன்புறத்தில் மத்திய குற்ற தடுப்பு மற்றும் ஊழல் கட்டுப்பாடு என எழுதப்பட்டிருந்தது. பின்புறத்தில் மனித உரிமை பத்திரிகையாளர் அமைப்பு, சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் என பதிக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் கண்ட போக்குவரத்து ஆய்வாளருக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியிலிருந்த காவலர்களை, அந்த வாகனத்தில் இருப்பது யார்? என விசாரிக்குமாறு கூறியுள்ளார். 

அவர்கள் சற்று தயக்கத்துடன் வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர். உள்ளே இருந்த நபர் வாக்கி டாக்கியில் யாருடனே பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனால் ‘உயர் அதிகாரியா இருப்பாரோ’ என நினைத்த காவலர்கள், சார் நீங்க யார்? என விசாரித்துள்ளனர். அவர் தான் மத்திய அரசு அதிகாரி, மனித உரிமை அமைப்பு தலைவர் என பதவிகளை அடுக்கியுள்ளார். இதையடுத்து போக்குவரத்துத்துறை ஆய்வாளரே வந்து, அவரை யார் என்று விசாரித்துள்ளார். அத்துடன் அவரது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறியுள்ளார். அந்த நபர் ஒரு விசிட்டிங் கார்டை காட்டியுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ள முடியாது, உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் என காவல்துறையினர் கேட்க, அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். 

இதையடுத்து வண்டியை காவல்நிலையத்திற்கு கொண்ட சென்ற காவலர்கள், வண்டி எண் மூலம் அந்த நபர் அபிராமபுரத்தில் வசிக்கும் ரவிசங்கர் (50) என்பதை கண்டுபிடித்துள்ளனர். அவர் தொழிலதிபர் என்றும், போலியான அதிகாரி போல் நடித்தையும் அறிந்துள்ளனர். பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர், அவர்மீது மோசடி, அரசு அதிகாரி போல் நடித்து ஏமாற்றுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நபர் இதே காரை வைத்துக்கொண்டு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையில் சுற்றித்திரிந்ததுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் எதற்காக அங்கெல்லாம் சுற்றினார் எனக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com