பரமக்குடி - ராமநாதபுரம் இடையே, நான்கு வழி சாலை... பிரதமரின் அசத்தல் அப்டேட்..!
பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 4 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய விளையாட்டுக் கொள்கை 2025, ரூ. 1 லட்சம் கோடி நிதியுடன் கூடிய ஆராய்ச்சி மேம்பாடு, புதுமை திட்டம் (ஆர்டிஐ), வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் மற்றும் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான 4 வழிச்சாலைக்கான கட்டுமான திட்டம் என 4 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்து இருந்தார். தமிழகத்தின் பரமக்குடி - ராமநாதபுரம் வரை 46.7 கிமீ தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைப்பதற்கு ரூ.1853 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து தெரிவித்த அவர், இந்த நான்கு வழிச்சாலை திட்டம் அமலுக்கு வந்தால் வாகன வேகம் மணிக்கு 50 கி.மீ., என்பது 80 கி.மீ., உயரும். பயண நேரம் 60 நிமிடங்களில் இருந்து 35 நிமிடங்களாக குறையும். விபத்துகள் குறையும்.
திட்டம் முடிவடைந்தவுடன், பரமக்குடி- - ராமநாதபுரம் பகுதி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த வழித்தடமானது தற்போது இரண்டு வழி சாலையாக உள்ளது. மதுரையில் இருந்து பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதனோடு தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகள் இணைந்த இருவழி சாலையாக இருக்கிறது.
இனி இது 4 வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்த சாலை விரிவாக்கமானது, 5 தேசிய நெடுஞ்சாலைகள், 3 மாநில நெடுஞ்சாலைகள், மதுரை, ராமேசுவரம் ஆகிய 2 ரயில் நிலையங்கள், பாம்பன், ராமேசுவரம் ஆகிய 2 சிறு துறைமுகங்களை இணைப்பதாக இருக்கும். இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறையும். சுற்றுலா, ஆன்மிகம், கலாசாரம் போன்றவை மேம்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி! பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கவும் செய்யும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.