மதுரையில் செல்போன் கடை நடத்தியவரை பட்டப்பகலில் கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பரது மகன் சதிஷ். இவர் சமையல் அடுப்பு, செல்போன் மற்றும் மிக்ஸி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார். நேற்று மாலை சதிஷ் கடையினுள் பணியில் இருந்தபோது, அவரை அதே பகுதியை சேர்ந்த விமல், கார்த்திக் ஆகிய இருவரும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது.
நீண்ட நேரம் ஆகியும் சதிஷ் வீடு திரும்பவில்லை என்பதால், கடைக்கு சென்று பார்த்த அவரது குடும்பத்தினர் அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆயுதங்களுடன் கார்த்திக் மற்றும் விமல் கடைக்குள் சென்று திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் மற்றும் விமலை போலீஸார் தேடி வந்தனர்.
மேலும், சிசிடிவி காட்சிகள் அவர்கள் இருவரும் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞருடன் பேசியதை கண்டுபிடித்த போலீஸ், அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். இதன்மூலம் கிடைத்த தகவலின் படி, மதுரை மாநகர காவல் ஆணையரால் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கார்த்திக் மற்றும் விமலை இன்று அதிகாலை கைது செய்தனர்.
இருவரும் கொலை செய்யப்பட்ட சதீஷிடம் செல்போன் சர்வீஸ் செய்து விட்டு, அதற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அவர்கள் கொலை செய்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட சதிஷ்க்கு திருமணமாகி சில ஆண்டுகளே ஆன நிலையில், 2 வயது பெண் குழந்தை உள்ளது.